பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
06:06
சென்னை :கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அறநிலையத் துறை துாங்குகிறது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 18.72 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, சீனிவாசன் தாக்கல் செய்தார்.இம்மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிலுக்கு சொந்தமான இடங்களில், 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன; மீதமுள்ள நான்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வேண்டும்.மேலும், கோவில்களுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் கூறியதாவது:கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க வேண்டிய அறநிலையத்துறை, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துாங்குகிறது.கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, வழக்குகள் தொடர்ந்து தாக்கல் ஆகிறது. துவக்கத்திலேயே ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டிய அறநிலையத் துறை அதிகாரிகள், சம்பளம் மட்டும் பெறுகின்றனர்; எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஆக்கிரமிப்பு நடக்கும் வரை, அறநிலையத் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்? வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அதிகாரிகள் செயல்படுவது எதற்காக?வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள், முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கும், அறநிலையத் துறை அதிகாரிகள் சரிவர செயல் படாததே காரணம். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து விட்டு, இப்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது.இவ்வாறு முதல் பெஞ்ச் கூறியது.வழக்கு விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.