ஈரோடு: பெரிய சேமூர் செல்வ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு பெரிய சேமூர், பொன்னி நகரில் செல்வ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு வைத்தல் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.