பதிவு செய்த நாள்
30
ஜூன்
2022
10:06
ஜம்மு-அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்காக, ஜம்முவின் பகவதி நகரில் உள்ள அடிவார முகாமில் இருந்து, 4,890 யாத்ரீகர்கள் அடங்கிய முதல் குழு தன் பயணத்தை துவக்கிஉள்ளது. இதை, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இமயமலையில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் யாத்திரை மேற்கொள்வர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டாக, அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இதனால், இந்த ஆண்டு யாத்திரையில் அதிகமானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 3.42 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.இன்று துவங்கும் இந்த யாத்திரை, ஆக., 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு மார்க்கங்கள் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படும். தெற்கு காஷ்மீரின் பகல்ஹாமில் இருந்து நுன்வாத் வழியாக, 48 கி.மீ., துாரத்துக்கு பயணம் மேற்கொள்வர். அதேபோல் காஷ்மீரின் கந்தேர்பாலில் இருந்து கல்டால் வழியாக, 14 கி.மீ., துாரப் பயணத்தின் மூலம் அமர்நாத்தை அடைய முடியும்.இன்று பயணம் துவங்க உள்ள நிலையில், ஜம்முவின் பகவதி நகரில் உள்ள அடிவார முகாமில் இருந்து முதல் குழு தன் பயணத்தை நேற்று துவக்கியுள்ளது. மொத்தம், 176 வாகனங்களில், 4,890 பேர் யாத்திரை செல்கின்றனர்.அடிவார முகாமில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்தப் பயணத்தை ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதற்கிடையே, குல்காம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் இரண்டு லஸ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதி கைது: ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். வாகனத் தணிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிபொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். வாகனத் தணிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிபொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.