பதிவு செய்த நாள்
30
ஜூன்
2022
12:06
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆடி குண்டம் திருவிழா அடுத்த மாதம், 26ம் தேதி நடக்கிறது.கோவையில், பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் முக்கியமானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், குண்டம் திருவிழா நடைபெறும்.
கொரோனா பிரச்னையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். அடுத்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா துவங்குகிறது. 22ல் லட்சார்ச்சனையும், 23ல் கிராம சாந்தியும், 24ல் கொடியேற்றம் மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 25ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. 26ல் அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும், 27ம் தேதி மாவிளக்கு, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 28 ஆடி அமாவாசை, பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 29ம் தேதி மகா அபிஷேகம் மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், இரண்டாம் தேதி குருபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.