திருவட்டார் கும்பாபிஷேகம்: ஒற்றைக்கல் மண்டபம் எழுந்தருளினார் உற்சவமூர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2022 05:06
நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று உற்சவமூர்த்தி ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளினார். வரும் ஆறாம் தேதி இங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக பணிகள் நடைபெற்ற போது பாலாலயம் செய்து உற்சவமூர்த்திக்கு தனியாக பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை இந்த உற்சவமூர்த்தியை ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருள செய்யும் சடங்கு நடைபெற்றது. மேளதாளம் முழங்க முத்துக்குடை சூட உற்சவமூர்த்தி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அபிேஷகமும் அன்னதானமும் நடைபெற்றது. கோயிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.