குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண துறவிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 11:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணத்துறவிகள் உயிர்நீத்த செய்தி கூறும் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துபாண்டி, முருகன் கூறியதாவது: சமண துறவி அரிட்ட நேமிபடாரர் நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்ற செய்தியை கூறும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கிரந்தம், தமிழில் எழுதப்பட்டுள்ளது. அரிட்ட நேமிபடாரர் நிசிதிகை இது என்பது இக்கல்வெட்டின் குறிப்பு. சில வரிகளில் சேதமானதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என தெரியவில்லை. கல்வெட்டில் உள்ள நிசிதிகை என்ற சொல் பாண்டியநாட்டு கல்வெட்டில் இதுவரை இடம் பெற்றதில்லை. இதுவே பாண்டியநாட்டின் முதல் நிசிதிகை கல்வெட்டு. சமண தொடர்புள்ள குன்றத்தில் முதல் முறை சமண துறவி நோன்பிருந்து உயிர்நீத்த கல்வெட்டு கிடைத்துள்ளது. சங்ககாலத்திலேயே உயிர் போக்குவது குறித்து கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் 10ம் நுாற்றாண்டு வரை தொடர்ந்தது என்பதற்கு குன்றத்து கல்வெட்டு சான்று. கல்வெட்டு உள்ள இடத்தில் உடைந்த செங்கல், சிதைந்த கட்டட பகுதி, பானை ஓடுகள் இருப்பதால் துறவியர் மடம் உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கல்வெட்டை வாசித்து விளக்கம் அளித்தார் என்றனர்.