பதிவு செய்த நாள்
01
ஜூலை
2022
05:07
மதுரை:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, அறங்காவலர் குழுவை நியமிக்க, சாதகமான உத்தரவாதத்தை ஜூலை, 31க்குள் அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சென்னை, மயிலாப்பூர் ரமேஷ் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகம் மற்றும் அதன் உப கோவில்கள், சார்பு நிறுவனங்களை பராமரிக்க ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த, டெண்டர் அறிவிப்பை, கோவில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் வெளியிட்டார். இதில், விதிகளை பின்பற்றவில்லை. அறங்காவலர் குழு தான், நிதி சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும். செயல் அலுவலரே தக்காராக தொடர்வதால், அவர் இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறியிருந்தார்.
டெண்டர் ரத்து : கடந்த 2020 செப்., 22ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:இக்கோவிலை, ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலரே தக்காராக இரட்டை பதவியில் நிர்வகிக்கிறார். தக்கார் பதவி தற்காலிக ஏற்பாடு தான். கொள்கை முடிவு மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை அறங்காவலர் குழு தான் மேற்கொள்ள முடியும். தக்கார் டெண்டர் அறிவிப்பு வெளியிட முடியாது. அதை ரத்து செய்கிறேன். பழநி கோவிலுக்கு அறங்காவலர் குழுவை அமைப்பதை உறுதி செய்ய, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், ரமேஷ், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், செயலர் சந்திரமோகன், பழநி கோவில் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, மனு செய்தார்.
இறுதி முடிவு: ஏப்ரலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:ஜூன், 30க்குள் அறங்காவலர் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும்; கால வரையறையின்றி நீண்ட காலத்திற்கு ஒரு செயல் அலுவலரே தக்காராக செயல்படும் விரும்பத்தகாத நடைமுறை நிறுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அந்த வழக்கை மீண்டும் விசாரித்தார். தமிழக அரசுத் தரப்பில், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக, 2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அது பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் என, தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக, சாதகமான உத்தரவாதத்தை ஜூலை, 31க்குள் அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை, 29க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என, உத்தரவிட்டார்.