பதிவு செய்த நாள்
02
ஜூலை
2022
10:07
சென்னை: தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருந்து திருடுபோன, 17ம் நுாற்றாண்டில் தமிழில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட பைபிள், லண்டனில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில், 1706ல் மத போதகராக பணியாற்றியவர் பார்த்தோலொமஸ் சீகன் பால்க். இவர், அச்சகம் ஒன்றை ஏற்படுத்தி, கிறிஸ்துவர்களின் புனித நுாலான பைபிளின் புதிய அத்தியாயத்தை, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த பைபிள் தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பைபிள் திருடுபோய் விட்டதாக, 2005ல் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி,, ஜெயந்த் முரளி மற்றும் ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 2005 அக்., 7ல், வெளிநாட்டினர் சிலர் அருங்காட்சியகத்திற்கு வந்ததும், பார்த்தோலொமஸ் சீகன் பால்க் நுாற்றாண்டு நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றதும் தெரியவந்தது. இவர்கள் பற்றிய விபரங்களை இணையதளம் வாயிலாக தேடினர். அப்போது, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், கிங்ஸ் கலெக் ஷன் என்ற நிறுவனத்தின் இணையதளத்தில், சரபோஜி மன்னரின் கையெழுத்துடன், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் பைபிள் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இதை, தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த பைபிள், சஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது தான் என்பதை போலீசார் உறுதி செய்து, மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.