பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
ஆத்தூர்: ஆத்தூர் அருகே இந்து அறநிலையத்துறை தடை காரணமாக, கும்பாபிஷேகம் நடத்தாமல், ஸ்வாமி சிலைகளுக்கு கண் திறந்து வைத்து, பக்தர்கள் பூஜை செய்தனர். ஆத்தூர் அருகே பழனியாபுரி கிராமத்தில், பழமை வாய்ந்த ராயதுரை, பச்சை அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருவதால், பொதுமக்களிடம், கோவிலை ஒப்படைக்கும்படி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மீது, பழனியாபுரி கிராம மக்கள், நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சிதிலமடைந்து காணப்பட்ட கோவில் மற்றும் ஸ்வாமி சிலைகளை, கிராம மக்கள் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் (8ம் தேதி), கும்பாபிஷேகம் செய்து, ஸ்வாமிக்கு கண் திறந்து வைத்து, பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேல், முனியன், வரதராஜ் உள்ளிட்ட பத்து பேர், கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அதையடுத்து, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள், கோவில் கும்ப கலசத்தில் தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வதற்கும், ஸ்வாமி சிலைகளுக்கு, "கண் திறக்கவும், தடை விதித்தனர். அதனால், அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள், 500க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், ஆர்.டி.ஓ., முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, கும்பாபிஷேகம் செய்யாமல், ஸ்வாமி கண் திறந்து பூஜை செய்வதற்கு, ஒப்புதல் தெரிவித்தனர். தொடர்ந்து, டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான போலீஸார், கும்பாபிஷேகத்துக்கு கட்டியிருந்த சாரங்களை பிரித்தனர்.நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில், ராயதுரை, பச்சை அம்மன் கோவில் ஸ்வாமி சிலைகளுக்கு, "கண் திறந்து வைத்து, பூஜை செய்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.