சுரண்டை: சுரண்டையில் பிரார்த்தனை திருவிழா இன்று (10ம் தேதி) துவங்குகிறது. சுரண்டையில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா இன்று (10ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் நடைபெறும் பிரார்த்தனை திருவிழாவில் ஸ்தாபகர் பால்தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவசெய்தி வழங்குகின்றனர். நாளை (11ம் தேதி) காலையில் நடைபெறும் சிறப்பு வாலிபர் ஆசீர்வாத கூட்டத்தில் ராம்பால் தினகரன் கலந்து கொள்கிறார். இயேசு அழைக்கிறார் அமைப்பின் சீஷா தொண்டு நிறுவனத்தின் மூலம் 300 ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும், சுரண்டையில் செயல்பட்டு வரும் சீஷா இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஏழைப் பெண்களுக்கு சான்றிதழ்களையும் பால்தினகரன் வழங்குகிறார். ஏற்பாடுகளை பிரார்த்தனை திருவிழாவின் தலைவர் ஜெயசிங், துணைத் தலைவர் அருமைநாயகம், ஜெயராஜ், பொது ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்திரன், பொருளாளர் நவ்தேவ், சவுந்தரராஜன் மற்றும் இயேசு அழைக்கிறார் சர்வதேச ஊழியத்தின் முதுநிலை இயக்குநர் அலெக்ஸாண்டர் செய்துள்ளனர். விழா முடிந்தவுடன் அனைத்து ஊர்களுக்கும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.