பதிவு செய்த நாள்
10
ஜூலை
2022
09:07
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் ஆன திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது ஜேஷ்டாபிஷேகம் ஆகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீநம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நாளை (11ம் தேதி) நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை காலை 6.00 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ள குடங்களுடன் புறப்பட்டு காவிரிஆற்றுக்கு வருவர். அங்கு கோயில் வழக்கப்படி கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்படும். பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் எடுக்கப்படும். அங்கிருந்து 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோயில் யானை ஆண்டாள் மீது வைத்தும் , 26 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க அம்மா மண்டபம் சாலை, இராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக காலை 9.15 அளவில் கோயிலுக்கு எடுத்து வரப்படும். பின்னர் ஸ்ரீநம்பெருமாள் மற்றும் உபய நாச்சிமார்களுக்கு பெரிய திருமஞ்சனம் நடைபெறும். மூலவர் ரங்கநாதர் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் மற்றும் உபயநாச்சிமார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரி பார்க்கப்படும். அதன் பின் பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்புவிக்கப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவர் அரங்கநாதருக்கு அபிஷே மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும்.
இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித் தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் தைலக் காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் திருமுகத்தை மட்டும் தான் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். இதன் ஒருபகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான நாளை மறுதினம் (செவ்வாய் கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ள மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்ட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.