பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
08:07
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு, வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்துார் நாச்சியார், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோவில்களில் இருந்து, திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை மானியக் கோரிக்கையின்போது, மற்ற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழக கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட, வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பழநி தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, கேரளா, சபரிமலை சாஸ்தா கோவிலுக்கும்; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திரா ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கும். பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து, கர்நாடகம், மைசூரு சாமுண்டிஸ்வரி அம்மன் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்க, அர்ச்சகர், பட்டாச்சாரியார்களை ஆலோசித்து, கோவில் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு, வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற மாநில கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்தரமோகன், கூடுதல் கமிஷனர் கண்ணன், மயிலாப்பூர் கோவில் இணை கமிஷனர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.