ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
ஹிந்து சமய அற நிலைய துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த ஜூலை 3ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மண்டகப்படி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் முன்னே செல்ல கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 11: 15 மணிக்கு நான்கு ரத வீதியை சுற்றி வந்த தேர் நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா தக்கார் முத்துராஜா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.