தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆனித் திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமி சொர்ணமூர்த்தீஸ்வரும், பெரியநாயகி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் விஷேச வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஐந்தாம் நாள் சுவாமி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடக்க வேண்டும். புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறவில்லை என்பதால் தேருக்கு பதிலாக சுவாமி அம்மன் இன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் முன்னே இழுக்கவும் பின்புறம் தள்ளிவிடவும் சுவாமி சப்பரபவனி நடந்தது. தேவகோட்டை சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பழங்கள் வீசப்பட்டன.
போலீஸ் குவிப்பு : தேர் வெள்ளோட்டம் நடைபெறாத சூழ்நிலையில் வழக்கமான தேரோட்டம் இல்லை சப்பரபவனி தான் என தெரிந்தும் ஏடிஎஸ்பி தலைமையில் நான்கு டிஎஸ்பிக்கள் உட்பட 350 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.