திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் தேர் தீ மிதி விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இதன் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை திரவுபதி அம்மன் சமேத அர்ஜுனன், கிருஷ்ணர் தேரில் எழுந்தருளி வீதி உலாவும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட சக்தி கரகம் தீக்குண்டத்தில் எழுந்தருள, பின்தொடர்ந்த வேண்டுதல் உள்ள ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனை அடுத்து சுவாமி தேரில் வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.