பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
04:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடிக்குண்டம் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். கொரோனா பிரச்னையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக குண்டம் விழா நடைபெறவில்லை. இந்தாண்டு குண்டம் திருவிழா வருகிற, 19ம் தேதி பூச்சாட்டுடன் தூங்குகிறது. 22ம் தேதி லட்சார்ச்சனையும், 24ம் தேதி கொடியேற்றமும், 26ம் தேதி குண்டம் இறங்கும் விழாவும் நடைபெற உள்ளது. இதை அடுத்து இன்று காலை, குண்டத்திற்கு கண் திறக்கும் விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை செய்தனர். பூஜை முடிந்த பின்பு பக்காசூரன் சிலை முன்பாக உள்ள, 36 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள குண்டத்திற்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குண்டத்திற்கு பரம்பரை அறங்காவலர் வசந்தா தலைமையில், சிறப்பு பூஜை செய்தனர். பின்பு குண்டம் கண் திறக்கப்பட்டது. இவ்விழாவில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் மல்லிகா, உதவியாளர் திருநாவுக்கரசு, இளநிலை உதவியாளர் செந்தில்குமார், புலவர் சௌந்தரராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். குண்டம் கண் திறப்பு விழாவை எடுத்து இன்று முதல் குண்டம் திருவிழா மறுபூஜை நடைபெறும் வரை கோவில் வளாகத்தில் எவ்வித கிடாய் வெட்டும், விருந்தும் நடைபெறாது.