பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
05:07
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூரில், மிகப்பழமையான திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாதர் சுவாமி கோவிலில், நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை அடுத்த நாகூரில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று பிரசித்திப் பெற்ற திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாதர் சுவாமி கோவில், பிரம்மோற்சவ விழா, கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அம்பாளுடன், சேஷ, பூத,சிம்ம, வசந்த, மயில், ரிஷப, கைலாச வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவந்தார். முக்கிய நிகழ்வாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி நேற்று இரவு அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார். இன்று காலை கலெக்டர் அருண்தம்புராஜ், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராணி ஆகியோர், வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேரில் எழுந்தருளிய சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.