மதுரை, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜய யாத்திரை சென்றுள்ளார். கர்நாடக மாநில பயணத்தை முடித்து தற்போது ஆந்திராவில் முகாமிட்டுள்ளார். காக்கிநாடா அருகில் சமால்கோட் நகரில் 25ம் ஆண்டு ரஜதோத்ஸவ வேதசபா நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வெள்ளி விழாவை முன்னிட்டு அவருக்கு சந்த்ரபட்லா பதஞ்சலி சாஸ்திரி குடும்பத்தார் சார்பில் வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டது. விழாவில் விஜயேந்திரர் பேசும்போது, சமூகத்தில் அமைதி, முன்னேற்றம் ஏற்பட வேதங்களை படிக்க வேண்டும். இதற்கு வேத பண்டிதர்கள் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் ஆத்ம திருப்தியும் கிடைக்கும் என்றார். விழாவில் ஏராளமான வேத பண்டிதர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக அவர் அனுமன் கோயில், பார்வதி-சந்த்ர மவுலீஸ்வரர் கோயில்களுக்கும் சென்றார். காக்கிநாடாவில் உள்ள கோசாலையில் வியாச பவுர்ணமியையொட்டி பூஜை செய்ய உள்ளார்.