பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
05:07
மதுரை: கோவில்களின் நிலங்கள், இடங்களை விற்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதித்துள்ளதற்கு, ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது:அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்கள், மன்னர்கள், ஜமீன்தாரர்கள், செல்வந்தர்கள், பக்தர்களால் கோவில் நலனுக்காக வழங்கப்பட்டவை.அறநிலையத்துறையின், 100 சதவீத சொத்துக்களும் இப்படி வழங்கப்பட்டவையே. பணம், பொருளால் மட்டும் கோவில்களை பராமரிக்க இயலாது என்பதை உணர்ந்தே, அசையா சொத்துக்களாக மதிப்பு கூடும் நிலங்களாக அளித்தனர். இதன் வருவாய் பல இனங்களாக பிரிக்கப்பட்டு, மொத்த நிர்வாகமும் இன்று வரை சிறப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாக, கோவில் நிலங்களை அறநிலையத்துறை அழிக்க நினைப்பது முறையற்ற செயல்; கண்டனத்திற்குரியது. உடனே இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.