பிள்ளையார்பட்டியில் நாளை 1008 கலசாபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 05:07
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி நான்கு லட்ச ஜபங்களுடன் 1008 கலசாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது. உலகில் உள்ள உயிர்கள் நலம்பெற கற்பக விநாயகர் கோயிலில் விநாயகரை வேண்டி 4 லட்ச ஜபங்களுடன் 7 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்து 1008 கலசாபிேஷகம் நடைபெற உள்ளது.
அதற்கான யாகசாலை பூஜைகள் நாளை காலை 9:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. யாகசாலை பூஜைகளை தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தர குருக்கள் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து வந்துள்ள சிவாச்சார்யர்கள் நடத்துகின்றனர். இரண்டாம் நாளில் சாந்தி ஹோமம், மூன்றாம் நாளில் வாஸ்துசாந்தி நடைபெறும். ஜூலை 16, நான்காம் நாளில் மாலை காப்புக்கட்டி கோயில் மூலவர் சன்னதியிலிருந்து கலசங்கள் யாக சாலைக்கு புறப்பாடாகிறது. கலசங்கள் நிறுவிய பின் முதற்கால பூஜையும், ஐந்தாம் நாளில் 2,3ம் கால யாகசாலை பூஜைகளும், ஆறாம் நாளில் 4, 5ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறும். ஏழாம் நாளான ஜூலை 19 காலை 8:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை துவங்கும். காலை 11.00 மணிக்கு நான்கு லட்ச ஜப ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் கற்பகப் பெருமானுக்கு காலை 12:00 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் செய்கின்றனர்.