வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து செல்ல அறநிலையத் துறையினர் அறிவுறுத்தினர். மதியம் ஒரு மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. மழை மேகம் காணப்பட்டதால் நீர் வரத்து ஓடைகளை வனத்துறையினர் கண்காணித்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 10 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.