திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டியபுரம் துரையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டியபுரம் கிராமத்தில் பழமையான துரையம்மன் கோவில் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேரில் எழுந்தருள பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு துரையம்மன் தேரோட்டம் நடந்தது. துரை அம்மன் தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமி ஆலயத்தில் எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.