பதிவு செய்த நாள்
11
ஆக
2012
11:08
சேலம்: ஆடி மாத கடைசி வெள்ளியான நேற்று, ஆடிக்கிருத்திகையும் ஒருசேர வந்ததால், அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடிக் கிருத்திகையையொட்டி, நேற்று, முருகப் பெருமானுக்கு, விரதமிருந்து, பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று, சாத்துப்படி செய்து வழிப்பட்டனர். அதேபோல, ஆடிமாத கடைசி வெள்ளியான நேற்று, அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சேலம், குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், நேற்று, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின்னர், ராஜ அலங்காரத்தில், தண்டாயுதபாணி ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 1,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அம்மாப்பேட்டை குமரகுரு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து, பகல் 12 மணிக்கு ஓம்கார தீபம் ஏற்றி கூட்டு வழிபாடு நடத்தப்பட்ட. இதில், நூற்றுக் கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், மூலவர் பழனியாண்டவர் தங்கக்கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையின் நின்று, ஸ்வாமியை தரிசனம் செய்தனர். அதேபோல, கந்தாஸ்ரமம், ஊத்துமலை முருகன் கோவில், ஃபேர்லேண்ட்ஸ் முருகன் கோவில்களிலும் சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் சிலர், காவடி எடுத்து வந்து சாத்துபடி செய்தும், முடிகாணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ஆடி வெள்ளி: ஆடிமாத கடைசி வெள்ளியான நேற்று, சேலத்தில், எட்டுப்பட்டியையும் கட்டிக்காக்கும், தலைமை காவல் தெய்வமான, கோட்டை மாரியம்மன் கோவில், எல்லை பிடாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன், செங்குந்தர் மாரியம்மன், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன், பெரிய மாரியம்மன், குகை மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புற்றுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், பக்தர்கள் குடும்பம் சகிதமாக சென்று, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.