காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால்நாட்டு வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2022 08:07
விக்கிரமசிங்கபுரம்: காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் வளாகத்தில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோயிலில் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், கிலி பூதத்தார் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் பொறுப்பாளர் டி.என். எஸ்.எம். சங்கராத்மஜன், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உட்பட கோயில் கோமரத்தாடிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு ஏற்பாடுகள் : விழாவை முன்னிட்டு, வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அகஸ்தியர்பட்டியிலிருந்து தினமும் 120 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்குச் செல்ல காணிக்குடியிருப்பிலிருந்து இரவு 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆண்களுக்கு 200, பெண்களுக்கு 200 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 400 தற்காலிக கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது. ஓட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோயில் மற்றும் இதன் சுற்றுப்பகுதிகளில் 45 தண்ணீர் பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடுகள் வெட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது தண்ணீரில் ஆட்டின் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சந்நதிக்கு முன் சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முறையான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.