காணிப்பாக்கம் வர சக்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2022 08:07
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோயிலில் வார இறுதி நாட்கள் என்பதால் பக்தர்களின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததோடு தங்களின் நேர்த்திக்கடன்களையும் செலுத்தினர். ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மணி கணக்கில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு வாகனங்களில் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களினால் கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிரம்பி இருந்தது.இந்நிலையில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கோயில் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர்.
இதேபோல் திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலிலும் கடந்த இரண்டு நாட்களாக சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்தது . இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது. இதே போல் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.