காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில், புஷ்ப பல்லக்கு உற்சவம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் ஜூலை 1ல் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பிரம்மோற்சவத்தில் காலை, இரவு என தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்தார். 13ல் ரிஷப வாகனத்துடன் ஆனி திருக்கல்யாண பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை அடுத்து விடையாற்றி உற்சவம் துவங்கியது.இரண்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.இதில், மருகுவார்குழலி அம்பிகையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.