பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
11:07
திருத்தணி : ஆடி மாதம் பிறப்பு மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிறு என்பதால், காவடிகளுடன் பக்தர்கள் குவிந்ததால் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.இந்நிலையில், நேற்று, ஆடி மாதம் பிறப்பு மற்றும் வார விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே மலைக்கோவிலில் குவிந்தனர்.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.குறிப்பாக, குடியாத்தம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலர் காவடிகளுடன் சரவணபொய்கை குளத்துக்கு நேற்று காலை வந்தடைந்தனர்.பின், அங்கு காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 1 மணி நேரத்திற்குமேலாக வரிசையில் நின்று மூலவரை தரிசனம் செய்தனர்.அடுத்த வாரம் ஆடிக்கிருத்திகை விழா துவங்குவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வருவார் என்பதால், நேற்று பெரும்பாலான பக்தர்கள் காவடிகளுடன் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.முன்னதாக, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்குசிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.