பதிவு செய்த நாள்
11
ஆக
2012
04:08
தினமும் ஒரே வேலைக்குப் போகிறோம். செய்ததையே செய்கிறோம். காலையில் அலுவலகத்துக்கோ தொழிலுக்கோ கிளம்பும்போதே, அதே பைல், அதே கம்ப்யூட்டர், தூசு கிளப்பும் அதே மளிகை சாமான், அதே டிரை சைக்கிள்... என்ன வாழ்க்கை இது! என்று புலம்புகிறோம். செய்த வேலையைத் திரும்பத் திரும்பச் செய்தால், நிச்சயம் சலிப்பு தட்டத்தான் செய்யும். அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்களை தேடி அலைய முடியுமா என்றால் அது சாத்தியமில்லை. ஒருவேளை, அதுவும் சாத்தியமாகி விட்டாலும், தினமும் ஒரு வேலைக்கு மாறும் வேலையே போரடிப்பதாகத் தானே மாறி விடும்! ஒரு சம்பவத்தைக் கேளுங்க! ஒரு ஆசிரியர் இருபது வருடங்களாக வரலாற்றுப் பாடம் கற்றுக் கொடுத்து வந்தார். அவரிடம் படித்த மாணவர் பிற் காலத்தில் முதல் மந்திரியானார். ஒருநாள் முதல்வர், தனது ஆசிரியரைக் காண திடீரென்று பள்ளிக்கு வந்தார். ஆசிரியர் தம் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான பாடத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் முதல்வரைக் காண உடனடியாக வரமுடியவில்லை. மந்திரி சிறிதுநேரம் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மந்திரி ஆசிரியரிடம் குசலம் விசாரித்த பின், ஒரு முதல்மந்திரியை இவ்வளவு நேரம் காக்க வைக்கலாமா? என்று கேட்டார்.
தம் பாடம் பற்றி சிந்திக்க வேண்டியிருந்ததால் சற்று தாமதமாகி விட்டதாக ஆசிரியர் பதிலளித்தார். முதல்வர் கேலியாக, சார்! இருபது வருடமாக அதே வரலாற்றுப் பாடத்தைத் தானே போதித்து வருகிறீர்கள். இதில் புதிதாகச் சிந்திக்க என்ன இருக்கிறது? என கேள்வி தொடுத்தார். உடனே அந்த ஆசிரியர் உணர்ச்சியுடன்,நான் போதிக்கும் வரலாற்றுப் பாடம் அதேதான். ஆனால், மாணவர்கள் வருடந்தோறும் மாறுகிறார்களே! நான் மாணவர்களின் திறன் அறிந்து புதிது புதிதாகச் சிந்தித்து பாடம் நடத்தியாக வேண்டுமே! ஏனெனில், பாயும் புனலைப் (ஓடும் நீர்) பருகவே நான் விரும்புகிறேன், தேங்கிய குட்டை நீரை அல்ல, என்றார். ஆசிரியர் அவ்வளவு அற்புதமானவராக இருந்ததால் தான், மக்கள் அவரது
மாணவரை முதல்மந்திரி ஆக்கினார்கள். எந்தந்த செயல்களால், நம் அந்தராத்மா திருப்தி அடைகிறேதா அவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.
அதாவது நமக்கு திருப்தி யளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். செயல் திருப்தி நமக்கு அத்தியாவசியத் தேவை ஆகும். அது கலைஞர்களுக்கும், கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. காய்கறி நறுக்குவதிலும் கூட செயல் திருப்தி கொண்டு வரப்பட வேண்டும். ஒரு செயலை தெளிந்த அறிவுடனும், மகிழ்ச்சியுடனும், முறைப்படியும் செய்வது அச்செயலையே திரும்பவும் செய்கிறோம் என்ற தேங்கிய மனநிலையில் இருந்து நம்மை மேம்படுத்தும். நம் வேலையைப் பற்றிய அறிவு... அதைச் செய்யும் போது நமக்குள் நிலவும் சந்தோஷம்... இதை வளர்த்துக் கொண்டால் நமக்கு சலிப்பே தோன்றாது.
-சொல்கிறார் விமூர்த்தானந்தர்