பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
05:07
கொடுமுடியில் தாசில்தார் மாசிலாமணி தலைமையில், தாலுகா அலுவலகத்தில், நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது. இதில் கோவில் பகுதியில் பரிகார நிலையம் வைத்திருப்போர், ஆற்றோரம் கடை வைத்திருப்போர் என, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சுகுமார், பொதுப்பணி மற்றும் மின்வாரிய துறை, போலீசார் கலந்து கொண்டனர்.
காவிரி ஆற்றங்கரையில், இனிவரும் காலங்களில் யாரும் பரிகாரம் செய்யக் கூடாது. அதற்கென கோவில் நிர்வாகத்தால் தனி இடம் ஒதுக்கப்படும். பரிகாரம் செய்யக்கூடிய, முறைப்படி பயிற்சி பெற்ற, சான்றிதழ் வைத்துள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பரிகாரம் செய்யக்கூடாது. முறையான பயிற்சி பெற்றவர்கள், தகுந்த விண்ணப்பத்துடன், செயல் அலுவலரை அணுகி அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். ஆற்றங்கரையில் பரிகார நிலையம் வைத்திருக்கும் இடம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் உடனே அகற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். ஆக்கிரமிப்பை அகற்ற வரும், 31ம் தேதி வரை, அவகாசம் வழங்கப்படுகிறது. ஆக.,1க்குள் ஆற்றங்கரையில் உள்ள கடைகளையும், சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே எடுத்துக் கொள்ளவும் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டது.