திருத்தணி-திருத்தணி முருகன் கோவிலில் நேற்று இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். கடந்த, 21ம் தேதி துவங்கிய ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. நேற்று இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து பொது வழியில், நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.நேற்று, இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மலைப்படிகள் வழியாக திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். பின் உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து தெப்பத்தில் உற்சவர் ஐந்து முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று மாலை, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவுடன் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நிறைவடைகிறது.