பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
05:07
ஊத்துக்கோட்டை--பெரியபாளையம், பவானியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.கடந்த, 17ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை முடிந்த நிலையில், நேற்று இரண்டாவது வாரம் சிறப்பாக நடந்தது. தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் வாகனங்களில் குவிந்தனர்.கடந்த முதல் ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி குறைவாக இருந்தது. கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்தான செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதால், எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்ய தயாரானது.ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய ஆணையர் சாந்தி ஆகியோர் தலைமையில், 9 தற்காலிக கழிப்பறை, 20 இடங்களில் குடிநீர் தொட்டி ஆகியவை வைக்கப்பட்டது.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஆந்திர மாநிலம், கர்நுால், கடப்பா, திருப்பதி வழியே, ஊத்துக்கோட்டை வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள், அங்கிருந்து சத்தியவேடு, திருவள்ளூர் வழியே போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர்.ஆனாலும், பக்தர்கள் அதிகளவு குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.