பதிவு செய்த நாள்
26
ஜூலை
2022
08:07
திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாதஸ்வரம் மற்றும் மேளகலைஞர்கள் இல்லாததால் பூஜைகள் பஞ்சவாத்தியம் இன்றி நடந்து வருகிறது. திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் கடந்த 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் வேலை பார்த்து வந்த நாதஸ்வர கலைஞர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இதுவரை புதிதாக நாதஸ்வர கலைஞர் நியமிக்கப்படவில்லை. அதே போல் இங்கு வேலை பார்த்து வந்த தவில் கலைஞர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் தற்காலிகமாக கும்பாபிஷேகம் வரை வேலை பார்த்து வந்தார். அவருக்கும் உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரும் தற்போது வேலைக்கு வரவில்லை. திருவட்டார் கோவிலில் காலை , மதியம் மற்றும் இரவில் சுவாமி ஸ்ரீபலி எழுந்தருளும் போதும், தீபாராதனையின் போதும் நாதஸ்வரம், மேளம், பஞ்ச வாத்தியம் இசைக்கப்பட வேண்டும் என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு. ஆனால், தற்போது எந்த வித இசை வாத்தியமும் இன்றி சுவாமி எழுந்தருளல் மற்றும் தீபாராதனை நடப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
கருட வாகனம் சரி செய்வது எப்போது?: கோவிலில் உள்ள வெள்ளி கருட வாகனம் சேதமடைந்ததை அடுத்து, சென்னையை சேர்ந்த தனியார் அமைப்பு சுமார் ஒன்றே முக்கால் கிலோ வெள்ளிக்கட்டியை இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு காணிக்கையாக அளித்தது. ஆனால் இதுவரை அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக் காததால் கருட வாகனம் சரி செய்யும் பணிதுவங்கப்படவில்லை. இது குறித்து கோவில் மேலாளர் மோகன்குமார் கூறியதாவது,” கோவிலில் நாதஸ்வர, தவில் மேள , பஞ்சவாத்தியகலைஞர்கள் நியமிப்பது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் இசைக்கலைஞர்கள் நியமிப்பார்கள். அதுபோல் கருட வாக னம் சரி செய்வதற்குரிய அரசின் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதி உள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் கருட வாகனம் சரி செய்யும் பணி துவங்கும், என்றார்.