ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் 46 ஆம் ஆண்டு, பால்குட விழா ஜூலை 18ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பால்குட விழா, இன்று காலை 10:30 மணிக்கு துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். பின்பு பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் மூலம், மூலவர்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆர்.எஸ்.மங்கலம் இந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.