பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 5ல் சாட்டுதலும், ஜூலை 11 ல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா ஜூலை 20 வரை நடந்தது. இன்று கோயிலில் மறுபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, மண்ணால் செய்த உடல் அவையங்களை செலுத்தினர். தீர்த்தவாரி உற்சவம்: தீர்த்த தொட்டியில் சிறிய அளவிலான குடத்தில் தீர்த்தம் எடுத்து, பால் ஊற்றி வேப்பிலை மேல் தேங்காய் வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அம்மன் துதி பாடி நடந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்தனர். பால்குடம் எடுப்பதினால் குடும்பத்தில் துன்பம் என்னும் இருள் விலகி, இன்பம் என்னும் மகிழ்ச்சி பால் போல பொங்கும் என்பது ஐதீகம். பால் குடத்திற்கு முன்பாக நாதஸ்வரம், மேளதாளம் ஒலிக்க தேரில் அம்மன் வீதி உலா சென்றார். கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏற்பாடுகளை தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.