சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா : தாணிப்பாறையில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2022 07:07
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா, பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இதற்காக தாணிப்பாறையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
இக்கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜுலை 25) முதல் ஜூலை 30 வரை 6 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்திருந்தனர். அதிகாலை 05:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது. மதியம் மூன்று மணி வரை சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 04:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை மோப்பநாய் சிமி மூலம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.