பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
08:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேல்பட்டி அருகே தர்மராஜா நகருக்கு மேற்கே உள்ள ஒரு பாறையில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் இருப்பதை, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.
இதுகுறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இப்பாறையில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்தினால் வரையப்பட்ட, 50க்கும் மேற்பட்ட ஓவியங்களில், பாண்டில் விளக்கு, குறியீடுகள் மற்றும் மனித உருவங்கள் உள்ளன. குறியீடுகளில், வட்டத்துக்குள் கூட்டல் குறி, அவற்றுக்கிடையே, 4 புள்ளிகள், பெருக்கல் குறியின் இரண்டு முனைகளும் இணைந்த அமைப்பு மற்றும் ஆறு முனையுடன் கூடிய நட்சத்திரம், வட்டம் பல கட்டங்களாக பிரிக்கப்பட்ட கோலம் போன்ற அமைப்பு குறிப்பிடத்தக்கவை. வட்டம் மற்றும் சதுரத்துக்குள் மனிதன் வரையப்பட்டுள்ளது, இறந்த மனிதனை அடக்கம் செய்திருப்பதை காட்டுகின்றன. மேலும், இறந்தவர்களின் ஆன்மாவை குறிக்கும் பாண்டில் விளக்குகள் உள்ளன. இந்த ஓவியங்கள் இறந்தோரின் நினைவாக வரையப்பட்டுள்ளன. இப்பாறைக்கு அருகில், கல்திட்டைகள் இருந்ததை இந்த ஓவியத்தில் காட்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்றுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், மனோகரன், விஜயகுமார், வரலாறு ஆசிரியர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.