பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
08:07
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஆடி மாத, சோம வார தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நேற்று (26ம் தேதி) நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். சர்வ அலங்காரத்தில் பிரதோஷ மூர்த்தி, சங்கு நாதம், தீப ஆராதனைகளுடன், பக்தர்கள் பாடல்கள் பாட கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இன்றைய இறைப் பணியில் கோட்டப்பட்டியைச் சேர்ந்த சிவ.P.சங்கரன் - சிவ.S.பவித்ரா, சிவ.P.பன்னீர் செல்வம் - சிவ. P. பரமேஸ்வரி குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம், அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.