சாணார்பட்டி அருகே உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2022 08:07
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆடி அமாவாசையான நேற்று உலக நன்மை வேண்டி, ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுக்கடை ஆதி பரஞ்சோதி சகலோக சபையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று கோ பூஜை, பிரித்திங்கரா தேவி யாகம் மற்றும் நரஸிம்ஹி மகா யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெறும். நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு காலை முதல் கோ பூஜை நடந்தது. இதையொட்டி சபையில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை மற்றும் உணவுகள் வழங்கி பின் கோ பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் மற்றும் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின் யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்டி பிரித்தியங்கிரா தேவி யாகத்தை சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். யாகத்தில் பட்டாச்சாரியார் மந்திரங்களைச் சொல்ல பக்தர்களும் அதே மந்திரத்தை சொல்லி யாகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட மற்றும் கேரளாவில் இருந்து வெளி மாநில பக்தர்களும் ஏராளமானோர் யாக பூஜையில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.