பதிவு செய்த நாள்
06
ஆக
2022
11:08
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், ஆடி மூன்றாவது வெள்ளியான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பல நூறு ஆண்டுகள் பழமையான அன்னூர் பெரியம்மன் கோவிலில், ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு, நேற்று மதியம் அபிஷேக பூஜையும், இதையடுத்து, 1008 மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர்- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவில், மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில், உள்ள அருந்தவ செல்வி அம்மன், அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவிலில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.