பதிவு செய்த நாள்
06
ஆக
2022
12:08
பாகூர் : சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது.
பாகூர் அடுத்த சேலியமேட்டில் உள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், இரவு காமதேனு, சிங்கம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலாவும் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் செடல் போட்டும், அலகு குத்திக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தேரோட்டத்தை, துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமன், துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சீனுவாசன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர் சுதந்திரா ரகுராமன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.