பதிவு செய்த நாள்
08
ஆக
2022
05:08
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பழமையான சிற்பம் ஒன்றை, வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகேமுஷ்டக்குறிச்சி கிராமத்தில், பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக, வரலாற்று ஆர்வலர் சக்தி பாலன் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தில் தகவல் கொடுத்தார். இதையடுத்து, மையத்தின் வரலாற்று ஆய்வாளர் செல்வம், தேவாங்கர் கலை கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ் நேரில் சென்று, சிற்பத்தை ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது, " இந்த சிற்பமானது முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது. ஒரே பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கும் கலாச்சாரம், தெற்கில் பாண்டிய நாட்டிலும், வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது. இந்த நடுக்கல் அரச மகளிர் அல்லது ஒரு உயர் குடி பெண்ணிற்காக எடுக்கப்பட்டதாகும். பெண்ணின் உருவம் வலது கையில் ஏதோ ஒரு பொருள் ஒன்றை வைத்து உள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் சிதைவடைந்த நிலையில், இருப்பதால் அது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை. அவரின் இடது கை அவரது குழந்தையின் தலையில் கை வைத்து, அரவணைப்பது போல் உள்ளது. அவரின் வலது கைக்கு கீழே, பெண்மணி ஒருவர் கையில் சாமரம் வீசுவது போல் உள்ளது. அரச மகளிர் உயர்குடி பெண்களுக்காகத்தான் இது போன்ற சிற்பங்கள் வடிப்பது வழக்கம். இவரின் கணவர் போரில் இறந்து இருக்கலாம். இவரும், இவரது குழந்தையும் ஏதேனும் நோயினால், இறந்து இருக்கலாம். அதனால் தான் இவருக்கும், குழந்தைக்கும் மட்டும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தைச் சுற்றிலும் அழகான வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் 2 அரை அடி உயரமும், ஒன்றை அடி அகலமும் கொண்டது. இந்தச் சிற்பத்தின் காலம் 9 முதல் 10 ம், நூற்றாண்டாக இருக்கலாம். இதைப் போன்ற முற்கால பாண்டியர் சிற்பம் கிடைப்பது மிகவும் அபூர்வமாகும்" என்று கூறினர்.