பதிவு செய்த நாள்
09
ஆக
2022
08:08
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஆற்றில் அம்மன் கோவிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. கோவில் வளாகத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை, அதன் உரிமையாளர்கள் தூக்கிச் சென்றனர்.
கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதியில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த, ஐந்தாம் தேதி நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வந்து கொண்டிருந்ததால், கடந்த நான்கு நாட்களாக அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு, நேற்று காலையிலிருந்து வினாடிக்கு, 21,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, அணைக்கு வருகின்ற தண்ணீரை, நான்கு மதகுகள் வழியாகவும் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலத்தின் அருகே, ஆற்றில் பவானி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால், கோவிலை சுற்றியும் தண்ணீர் சூழ்ந்தது. கோவில் வளாகத்தின் உள்ளே, ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தண்ணீரில் ஆடுகள் அடித்துச் சென்று விடுவோம் என்று அச்சமடைந்த உரிமையாளர்கள், ஆடுகளை ஒவ்வொன்றாக தூக்கிக் கொண்டு, தண்ணீரில் நடந்து கரைக்கு வந்தனர். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், பவானி ஆற்று பாலத்தில் இருந்து, ஒலிபெருக்கி வாயிலாக, பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்தார். அவர் பேசுகையில், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோரம் உள்ளவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது, என்றார்.