பதிவு செய்த நாள்
10
ஆக
2022
08:08
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இன்று(10ம் தேதி) ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று’ என்ற ஒப்பற்ற துவத்தை உலகுக்கு உணர்த்தும் அரிய நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுவாமியும், இரவும் கோமதி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 7ம் திருநாளான கடந்த 6ம் தேதி இரவு கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருநாளான கடந்த 8ம் தேதி தேரோட்டம் நடந்தது. 11ம் திருநாளான இன்று(10ம் தேதி) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பசுகாட்சி நடக்கிறது. முன்னதாக அதிகாலை 05 மணிக்கு மூலஸ்தானம் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திரமவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பரிவட்டம், திருக்கண் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.40 மணிக்கு கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தெற்கு ரதவீதியில் ‘சங்கரலிங்கசுவாமி’ தனது உடலின் ஒரு பகுதியை சிவனாகவும் மற்றொரு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி ‘சங்கரநாராயண சுவாமியாக’ காட்சி கொடுக்கும் அரிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர். தென்காசி எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில் கூடுதல் எஸ்.பி., சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி., சுதீர் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.