பதிவு செய்த நாள்
14
ஆக
2012
11:08
மோகனூர்: ஆண்டாபுரம் காமாட்சி அம்மன், கருப்பணார் கோவிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் முப்பூஜையை முன்னிட்டு, ஆகஸ்ட் 24ம் தேதி, அறுத்தக்கோழி கூவும் பூஜை கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் அடுத்த ஆண்டாபுரம் தேவேந்திரகுலத் தெருவில், முருகன், பெரியக்காள், காமாட்சி அம்மன், பெரியசாமி, கருப்பண்ணார் ஸ்வாமி, தங்காயி, பொன்னர்-சங்கர், வையமலை சாம்புவன் மற்றும், 32 தெய்வங்கள் உள்ளன. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முப்பூஜை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் முருகனை அழைத்து ஆற்றில் நீராடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, ஆற்றில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஆக., 14) காலை 10 மணிக்கு, படுகளம் பூஜையும், நாளை (ஆக., 15) பன்றி, கிடா, கோழி வெட்டுதல் மற்றும் காவல் பூஜையும் நடக்கிறது.ஆகஸ்ட் 24ம் தேதி, ஆண்டாபுரம் ஏரிக்கரையில் அமைந்துள்ள புங்கமர கருப்பணார் ஸ்வாமிக்கு அறுத்தக்கோழி கூவும் பூஜை நடக்கிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பங்காளிகள், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.