செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கிணற்றில் தூர்வரும் பணி துரிதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2012 11:08
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கருவறைக்கு அருகே தூர்ந்து போய் இருந்த கிணற்றில் தூர்வரும் பணி நடந்து வருகிறது.செஞ்சி நகரில் சங்கராபரணி ஆற்றங்கரையில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறைக்கு பின்புறம் இடது பக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்று அடி அகலத்தில் தொட்டி போன்ற அமைப்பு காணப்பட்டது. நாளடைவில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டியதால் இது தூர்ந்து போனது. வழிபாடு இல்லாமல் இருந்த கோதண்டராமர் கோவிலில் கடந்த சில ஆண் டுகளாக ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து பொது மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மூலவருக்கு அபிஷேகம் செய்ய சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். கோவில் சிதிலமடைவதற்கு முன்புவரை அபிஷேகத்திற்காக கோவிலின் உள்ளேயே கிணறு இருந்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனடிப்படையில், கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிறுவனர் ரங்க ராமானுஜ தாசர் மேற்பார்வையில் இங்கிருந்த தொட்டி போன்ற அமைப்பை தூர்வாரி வருகின்றனர். ஒரு மாதமாக நடந்து வரும் இப்பணியில் தற்போது 20 அடி ஆழம் வரையில் தூர் வாரி உள்ளனர். ஆற்றுக்கு மிக அருகில் இருப்பதால் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. செஞ்சி கோட்டை வெங் கட்ரமணர் கோவிலில் உள்ள பாதாள சுரங்கம் போன்றே தற்போது தூர் எடுக்கப்படும் கிணறும் உள்ளது. ஒரே காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் தற்போது தூர்வாரி வரும் பகுதி கிணறா அல்லது பொங்கிஷங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ரகசிய சுரங்கமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவில் வளாகத்தில் வேறு இடங்களில் கிணறு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.