பதிவு செய்த நாள்
14
ஆக
2012
11:08
ஆத்தூர் : ஆத்துரில் மழைவேண்டி விவசாயிகள் வருணஜெபம் மற்றும் யாகம் நடத்தினர். ஆத்தூர் பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால் வாழை, வெற்றிலைப்பயிர்கள் வாடி வருவதோடு கால்நடைகளும் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் ஆத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் விவசாயிகள் சார்பில் நேற்று வருணபகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலையில் கணபதிஹோமம், வருணபகவான் யாகம், எஜமான் சங்கல்பம், சுவாமிக்கும் அம்பாளுக்கும் மூர்த்திஹோமம், கும்ப ஆராகணம், வேதபாராயணம் செய்து வருண ஜெபம்,நவக்கிரக பூஜை ஆகியவை நடந்தது. பின்னர் வருணகும்பம் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. பின்னர் கோயிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. வருணபகாவன் யாகம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை ஆறுமுகங்கலம் சீனிவாசவாத்தியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் செய்தனர். இதில் ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்தலைவர் முருகானந்தம், வெற்றிலை விவசாயிகள் சங்கத்தலைவர் சதீஷ்குமார்,மேலாத்துர் பஞ் தலைவர் யசோதா,டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித்தலைவர் ஸ்ரீனிவாசன், ஆத்தூர் பஞ் நிர்வாக அதிகாரி முத்துக்கிருஷ்ணன், விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர்கள் லெட்சுமணன், செல்வராஜ், மற்றும் மணி,சுப்பிரமணியன், மூக்கன்சாமி, மாதவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆத்தூர் பகுதி விவசாயகள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.