கூவனூத்து கோவிலில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2022 08:08
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கூவனூத்து கோவிலில் உள்ள அம்மன் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாணார்பட்டி அருகே கூவனூத்து ஊராட்சி கவராயப்பட்டி திண்டுக்கல்- நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள செங்குளத்தின் கரையில் உள்ளது பத்திரகாளி அம்மன் கோவில். கவராயப்பட்டி கிராம மக்களால் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இக்கோயிலில் அம்மன் சிலையை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நிலையில் திறந்த வெளியில் இருக்கும். இக்கோயிலில் நேற்று ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகளை பூசாரிகள் சுப்பிரமணி, குப்புசாமி ஆகியோர் நடத்தினர்.பின் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது இதில் பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் வழக்கம் போல் இரவில் கோவிலை பூட்டி சென்றனர். நேற்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் கோவிலில் உள்ள பத்ரகாளி அம்மன் சிலையின் 2 கைகளும் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு ஒரு பேப்பரில் ஜாதியைப் பற்றி தகாத வார்த்தைகளில் எழுதி அப்பகுதி இளைஞரின் பெயருடன் வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் பேப்பரில் எழுதியுள்ள அப்பகுதி இளைஞரை அழைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.