கும்பகோணம்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதிகொண்டு ரினவிமோசன லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற பைரவர் சன்னதி இங்கு அமைந்துள்ளது. மூன்று துர்க்கைகள் ஒரே இடத்தில் காட்சியளிப்பது சிறப்பு. இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் திங்கள்தோறும் ரினவிமோசன லிங்கேஸ்வரருக்கு மூன்று கால சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடப்பது சிறப்பு.ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஞானாம்பிகை அம்பாள் சன்னதியில் குத்துவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். இவ்வாண்டும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி குத்துவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள், சுப்ரமணிய குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் ஞானாம்பிகைக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. குத்துவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.