பதிவு செய்த நாள்
16
ஆக
2012
10:08
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் நேற்று ஆவணி தபசு திருவிழா உள்பூஜையுடன் துவங்கியது. இத்திருவிழா வரும் 28ம் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் நடப்பது வழக்கம். அப்போது இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் மதியம் சுவாமி அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவில் கிளி, ரிஷபம், மயில், யானை, காமதேனு போன்ற வாகன சப்பரத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடக்கும். 11ம் திருநாள் அன்று தேரோட்டம், 13ம் நாள் அன்று இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலையில் சுவாமி முகலிங்கநாதராகவும், இரவில் பால்வண்ணநாதராகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் இக்கோயிலில் தற்போது புதிய ராஜகோபுர திருப்பணி நடந்து வருவதால் சமய சிவாச்சாரியார் ஜானகிராமன் அய்யர் அறிக்கையை ஏற்று இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல் ஆவணி தபசு திருவிழாவை கோயிலுக்கு உள்ளேயே உள்பூஜையுடன் நடத்த திட்டமிடப்பட்டு நேற்று மதியம் உள் பூஜையுடன் துவங்கியது. முதலாம் திருநாள் மண்டகபடிதாரர் கரிவலம்வந்தநல்லூர் பே.துரைராஜ் அன் சகோதரர் ஏற்பாட்டில் சுவாமி அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அர்ச்சகர் பாலமுருகன் அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் பூஜை நடத்தினார். திருவிழா நாட்களில் தினமும் மதியம் சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. உள்பூஜையுடன் திருவிழா நடப்பதால் இத்திருவிழாவை முன்னிட்டு வழக்கமாக நடக்கும் தேரோட்டம், தபசு காட்சிகள் ஆகியன நடைபெறாது. திருவிழா ஏற்பாடுகளை துணை ஆணையர் மற்றும் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் அன்புமணி, மண்டகபடிதாரர்கள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.