சீர்காழியில் 3 கோவில்களின் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2022 11:08
சீர்காழியில் பத்ரகாளியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், ஏழைகாத்தம்மன் ஆகிய மூன்று கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முழுவதும் பல பழமை வாய்ந்த காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இதனால் முற்காலத்தில் இவ்வூர் காளிபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதுவே பிற்காலத்தில் மருவி சீர்காழி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் ஸ்ரீ சக்ர மகாமேரு வித்தியா பீடத்துடன் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன், ஏழைகாத்த அம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 18ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தன. முதலில் விநாயகர் சன்னதி, அதனை அடுத்து ஏழைகாத்தம்மன், அங்காளம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7:40 மணிக்கு பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் கோவில் அர்ச்சகர் சுரேஷ் சிவம், மணிகண்ட சிவம், சட்டநாத சிவம் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இரவு அம்பாள் வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் எபிஎஸ்.குமார், நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன், நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி. பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.